செவ்வாய், 16 டிசம்பர், 2008

"சரோஜாதேவியுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது'' ரஜினிகாந்த் ருசிகர பேச்சு






சென்னை, டிச.17-

சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

விழாவில் பழம்பெரும் பாடகர் பி.பி.சீனிவாஸ், நடிகை சரோஜாதேவி, எஸ்.என்.லட்சுமி, தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ நிபுணர் கிருஷ்ணசாமி, விளையாட்டு வீராங்கனை சிறுமி விஜயலட்சுமி உள்பட பலர் சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், சரோஜாதேவிக்கு விருது வழங்கி பேசியதாவது:-


சரோஜாதேவி காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அவருடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை அந்த நேரத்தில் நான் ஹீரோவாக நடித்தால் கூட, அப்போது திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் என்னை நெருங்க விட்டு இருக்க மாட்டார்கள்.

சரோஜாதேவியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த விழாவிற்கு வந்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

கருத்துகள் இல்லை: